Showing posts with label Colosseum. Show all posts
Showing posts with label Colosseum. Show all posts

Monday, June 21, 2010

கொலோசியம், ரோம்


கொலொசியம் ரோம், இத்தாலி

கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

வரலாறு

கட்டுமானம்


கொலோசியத்தின் உட்புறத் தோற்றம் ஒன்று. நிலம் தற்கால மீள்கட்டுமானம் ஆகும். இதன் கீழ் அக்காலத்தில் விலங்குகளையும், அடிமைகளையும் அடைத்து வைக்கும் சிறிய அறைகள் இருந்தன.

கி.பி 72 ஆம் ஆண்டில், வெஸ்பாசியன் (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார்.

ரோமர் வரலாற்றின் பிற்காலம்

217 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டுமமைக்கப்பட்ட இது, கிறிஸ்தவம், படிப்படியாக மனித உயிர்கள் பலியாகும் வீரவிளையாட்டுக்களுக்கு முடிவுகட்டும் வரை பயன்பட்டு வந்தது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ஆம் ஆண்டுவரை பயன்பட்டது. 442 இலும், 508 இலும் ஏற்பட்ட புவியதிர்வுகளினால் இக்கட்டிடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது.

மத்தியகாலமும், மறுமலர்ச்சிக் காலமும்

847, 1349 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் ஏற்பட்ட புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இதன் முகப்பை மூடியிருந்த சலவைக் கற்கள், வேறு கட்டிடவேலைகளில் பயன்படுத்தப்பட்டதுடன், இவற்றை எரித்துச் சுண்ணாம்பும் தயாரித்தார்கள். மறுமலர்ச்சிக்காலத்தில், சிறப்பாக 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில், ரோம ஆளும் குடும்பங்கள், சென் பீட்டர் பசிலிக்கா (St. Peter's Basilica) மற்றும் தனியார் மாளிகைகளைக் கட்டுவதற்காக இந்தக் கட்டிடத்திலிருந்து சலவைக் கற்களை எடுத்துவந்தனர்.


கொலொசியம் ரோம், இத்தாலி