Saturday, June 5, 2010

ம. கோ. இராமச்சந்திரன்

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
Mgr4R.jpg
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
பிறப்பு ஜனவரி 17, 1917
நாவலப்பிட்டி, இலங்கையின் கொடி இலங்கை
இறப்பு டிசம்பர் 24, 1987
தமிழ்நாடு, இந்தியாவின் கொடி இந்தியா
தொழில் நடிகர், அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை

தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி
பிள்ளைகள் கிடையாது

எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.

இளமைப்பருவம்

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2] அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேரி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.[3]

திரைப்பட வாழ்க்கை

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை.

தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.

நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். பிரபல நாவலாசிரியர் அகிலன் எழுதி கல்கி இதழில் தொடராக வெளிவந்த கயல்விழி என்னும் புதினத்தின் அடிப்படையிலானது இது.

தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். இவற்றில் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கியிருந்தார்.

அரசியல் வாழ்க்கை


ம.கோ.இரா-வின் அம்பாசடர் கார்

இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[4].

எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

  • ராஜ ராஜன்
  • ராஜகுமாரி
  • மன்னாதி மன்னன்
  • மந்திரி குமாரி
  • திருடாதே
  • மலைக்கள்ளன்
  • அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
  • மதுரை வீரன்
  • புதுமைப்பித்தன்
  • ஆயிரத்தில் ஒருவன்
  • அன்பே வா
  • எங்க வீட்டுப் பிள்ளை
  • நாடோடி மன்னன்
  • படகோட்டி
  • ரிக்ஷாக்காரன்
  • உலகம் சுற்றும் வாலிபன்
  • ராமன் தேடிய சீதை
  • அடிமைப்பெண்

சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்

  1. பாரத் விருது - இந்திய அரசு
  2. அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
  3. பாரத ரத்னா விருது - இந்திய அரசு
  4. பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
  5. சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
  6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

  1. புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
  2. நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
  3. மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
  4. பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
  5. மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
  6. கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
  7. கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
  8. கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
  9. கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
  10. கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
  11. திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்

பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

  1. கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
  2. கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
  3. நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
  4. பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
  5. மக்கள் திலகம் - தமிழ்வாணன்
  6. வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
  7. புரட்சித்தலைவர் - கழகத் தோழர்கள்
  8. இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
  9. மக்கள் மதிவாணர் - இரா.நெடுஞ்செழியன்
  10. ஆளவந்தார் - ம.பொ.சிவஞானம்
  • ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 அல்லது எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 என்பது 1967-ல் நடிகர் ம. கோ. இராமச்சந்திரனை நடிகர் எம். ஆர். இராதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு


    துப்பாக்கிச் சூட்டையடுத்து சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். தேர்தலில் போட்டியிட வேட்பு மனு பதிவு செய்தார்.

    1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    நிகழ்வின் பின்புலம்


    அண்ணா தலைமையிலான தி.மு.க. வலுப்பெற்று வந்திருந்தது. கருணாநிதியின் நண்பராகவும் முன்னணி வாக்குசேகரிப்பாளராகவும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.

    துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர். தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

    எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.[1] பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான[2][3] ராதா, காமராஜரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

    துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று ம.கோ.இரா. சார்ந்திருந்த தி.மு.க. அரசு அண்ணா தலைமையில்[4] அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட ம.கோ.இராவும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும்.[5]

    வழக்கு மற்றும் தண்டனை விவரம்

    முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், இராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினர்.[6] ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதி மன்றத்தில் இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.

    அரசு தரப்பு வாதம்

    அரசு தரப்பிலிருந்து ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொழில்முறைப் போட்டி இருந்ததையும் அரசியல் காழ்ப்புணர்வு இருந்ததையும் சுட்டினார்கள். எடுத்துக்காட்டாக, ராதாவின் நண்பரான காமராஜரை எம்.ஜி.ஆர் தாக்குவார் என்றொரு வதந்தி பரவியதையடுத்து எம்.ஜி.ஆரைக் கடுமையாக தாக்கியும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் ராதா தனது நாத்திகம் இதழில் எழுதினார். மேலும் தயாரிப்பாளர் வாசுவின் சாட்சியின்படி அன்றைய தினம் ராதா ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கும் பொருட்டு அவரைச் சந்திக்கப் பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் வாக்கு சேகரிப்பிற்கு சென்று திரும்பியதால் காலம் தாழ்த்தினார் என்றும், அதன் காரணமாக ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலையும் கொண்டிருந்தார் என்றும் நிறுவினர்.

    மேலும் அந்நாட்களில் அவருக்குப் பெரிய பணமுடை இருந்ததாகவும் நிறுவப்பட்டது. தவிர, ராதா தன் கைப்பட எழுதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் காவல்துறை காவலரிடம் தந்ததாகவும் சொல்லப்பட்ட ஒரு அறிக்கையில் கொள்கைக்காகவும் கட்சி நலனிற்காகவும் தற்கொலைத் தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தவிர எம்.ஜி.ஆர். தோட்டத்து வீட்டில் பணிபுரிந்த வேலையாட்கள் சாட்சியத்திலும் எம்.ஆர்.ராதா "சுட்டாச்சு, சுட்டாச்சு" என்று கூறியபடி இருந்தார் என்று கூறப்பட்டது. இறுதியாக ராதாவின் துப்பாக்கியும் தோட்டாக்களும் எப்படி நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்தன என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

    எம்.ஆர். இராதா தரப்பு வாதம்

    அரசு தரப்பு சாட்சிகள் அமர்வு நீதிமன்றத்திலும் முந்தைய வழக்கிலும் சில முரண்பாடான தகவல்களைத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் வானமாமலை அவை தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்று வாதிட்டார். மேலும், எம்.ஜி.ஆருடன் தீவிர அரசியல் கருத்து வேறுபாடு ஏற்படும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் செல்வாக்கோ கொள்கைப் பிடிப்போ இல்லை என்று நிறுவும் முயற்சியில் வானமாமலையின் கேள்விகள் இருந்தன. இது அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் அவரை இக்கட்டில் ஆழ்த்தும் வகையிலுமான முயற்சியாயிருந்திருக்கலாம். ராதாவின் துப்பாக்கி மட்டுமல்லாமல் துப்பாக்கிக்கான அனுமதிச் சான்றிதழும் எப்படி அங்கு வந்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நிகழ்வு நடந்த சில மணி நேரத்திற்குள் ராதா வீட்டு வேலைக்காரர் குடிசையில் நெருப்பு பற்றிக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதற்கு நீதிபதி துப்பாக்கியையும் தோட்டாக்களையும் வேறு யாராவது எடுத்து வந்திருந்தாலும் ராதாவின் சட்டைப் பைக்குள் சில தோட்டாக்களை அவர் அறியாதவண்ணம் அவர்களால் வைத்திருக்க முடியாது என்று கருத்துத் தெரிவித்தார்.

    எம்.ஜி.ஆரின் சட்டையில் ராதாவின் இரத்தம் படிந்திருந்ததாகவும் அதை காவல்துறையினர் வரும்முன்னர் துவைத்தது ஏன் என்ற ஒரு முக்கிய கேள்வியையும் அவர் முன்வைத்தார். இது தொடர்பில் எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யும் வேளையில் அவருக்கு இரத்த வகைகளைப் பற்றி முன்னரே தெரியுமா என்று கேட்டு தெரியாது என்று கூறிய எம்.ஜி.ஆரிடம், அவர் நடித்திருந்த நாடோடி திரைப்படத்தின் திரைக்கதையில் இரத்த வகைகளைக் கொண்டு திருப்பம் கொண்டுவந்திருந்ததைச் சுட்டிக் காட்டி மடக்கிய விதம் அவரது திறனைக் காட்டியது.

    மேலும் வழக்கின் முதன்மை சாட்சியான வாசுவையும் அழைத்துக் கொண்டு ராதாவின் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு நேராக காவல் நிலையத்திற்குச் செல்லாமல் அரசு வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்றது எதற்காக என்ற வலுவான கேள்வியையும் எழுப்பினார். நீதிபதி தனது தீர்ப்பில் இதற்கு பதிலளிக்கும் வகையில் அது வாசுவிற்குத் தன்மீது பழிவந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

    தீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பின்


    மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட இவ்வழக்கைப் பற்றியும் நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பாகவும் தகவல்களைத் திரட்டி ஒரு நாளிதழ் நிருபர் என்ற புனைவுப் பாத்திரத்தின் பார்வையில் எழுதப்பட்ட புத்தகம்

    இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

    1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக பெரியாருடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.

    அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

    ம.கோ.இராவின் தொண்டையில் பாய்ந்த குண்டை நீக்க வேண்டாமென மருத்துவர்கள் கருதியதால் 1987-ல் அவரது இறப்பு வரை அதனுடனே அவர் வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகள் தொடர்ந்து நடிக்கவும் செய்தார்.

ஆதாரங்கள்

  1. எம்.ஜி.ஆர். வாழ்கை
  2. ↑ எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்", பி. பி. சி.. 2006-11-08 அன்று தகவல் பெறப்பட்டது. (தமிழ்)
  3. வாழ்க்கைக் குறிப்பு
  4. ↑ எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்", பி.பி.சி.. 2006-11-08 அன்று தகவல் பெறப்பட்டது. “திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் பிம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து. எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு கோயில் கட்டும் அளவுக்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணம்”

No comments:

Post a Comment